/

‘வேங்கை பிழைத்த வேல்’- மூமின் தொகுப்பை முன்வைத்து: ஆர்.காளிப்பிரஸாத்

ஷோபா சக்தி எந்த இடத்தில் முக்கியமானவர் என்றால், தமிழகத்தில் ஈழம் சார்ந்து உருவாக்கியிருந்த ஒரு கருத்துருவாக்கத்தில் தனக்கேற்ப சில புனைவுகளும் கலந்திருந்தன.  இதில் தமிழகத்தில் அரசு சார்பாக ஏற்கனவே இருந்த சில வசதிகள் வாய்ப்புகள் (இடஒதுக்கீடு, மதியவுணவு)  அரசியல் சார்ந்த உரிமைகள் இவற்றை மனதில் இருத்திக் கொண்டும் ஆனால் இதையும் தாண்டிய பொன்னுலகம் அங்கே இருப்பது போலவும் சிருஷ்டிக்கப்பட்டு ஒரு சில புனைவுகள் மேடைப்பேச்சு வாயிலாக தமிழகத்தின்  அன்றாட உலகில் புகுத்தப் பட்டிருந்தன. அது பல இடங்களில் சரியாக உரைக்கப் படாமலே இங்கே தவற விட்ட பல விஷயங்கள் அங்கே நன்றாக இருக்கின்றன என்று பொதுவாக   உரைக்கப்பட்டுக் கொண்டிருந்தன.  அது எவ்வாறு தோற்றமளித்தது என்றால் இங்கே இருக்கும் அத்தனை வசதி வாய்ப்புகளும் கொண்டு இன்னும் சிறப்பான / கட்டுப்பாடான நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று  தமிழகத்தில் இங்கே நினைத்துக் கொண்டிருந்தனர். இந்தப் பொன்னுலகப் புனைவை ஒரு புனைவாலேயே எதிர்கொண்டவர் என்கிற வகையில் ஷோபா சக்தியின் இடம் மிக முக்கியமானதே. அந்த புனைவு உருவாக்கிய பல உன்னதங்களை தன்னுடைய புனைவினால் அவர் உடைத்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தார். அந்த மக்களின் நிலை, அந்த இயக்கங்கள், அங்கு இருந்த சமூக ஒழுக்கவியல் சார்ந்து அனைத்தையும் தொடர்ச்சியாக மீட்டுருவாக்கம் செய்த படியே இருந்தார். அந்த சீண்டல்  என்பது ஏற்கனவே உன்னதங்களை உருவாக்கியவர்களுக்கும் அதை நம்பிக் கொண்டிருத்தவர்களுக்கும் ஒரு ஒவ்வாமையை உருவாக்கியபடிதான் இருந்தது. ஆனால் அதையும் மீறி அவர் எழுத்தில் இருக்கும் நடையும் அங்கதமும் பகடியும் குறு சித்தரிப்புகளும் அவர் எழுத்துக்களை தொடர்ச்சியாக வாசிக்க வைத்துக் கொண்டும் இருந்தன. இவ்வாறாக  ஒரே கதைக்காக ஒரு வாசகரால்  விரும்பப்பட்டும் அதே கதைக்காக அதே வாசகரால் வெறுக்கப்பட்டும் இருந்த எழுத்தாளர் இன்னொருவர் இல்லை. அந்த விதத்தில் ஷோபா சக்தி மிகவும் தனித்துவமான எழுத்தாளரும் கூட.

அவர் தன்னுடைய புனைவை அரசியலுக்காக உபயோகித்தார். தன்னுடைய அரசியலை     தொகுப்பின் அனைத்துப் பக்கங்களிலும்  ஏற்றினார். ஒரு சமர்ப்பணத்தில் ஒரு தொகுப்பின் அட்டை /தலைப்பில் கூட அவரது கலகம் வெளிப்பாட்டுக் கொண்டே இருக்கும். உதாரணமாக, எம்.ஜி.ஆர்,  ஈழப் போராளிகள் இயக்கத்தின்பாற்  கொண்டிருந்த அன்பை சொல்லி தமிழகத்தில் ஒரு விவாதம்  எழுந்து வரும்போது   இவர் ‘எம்.ஜிஆர் கொலை வழக்கு’ என்று ஒரு தொகுப்பு வெளியிடுவார்.  தமிழகத்தில் ஈழ ஆதரவுப் போராளிகள் கலைஞர் மீது விரோதம் பாவிக்கையில் தன் இன்னொரு சிறுகதை தொகுப்பினை “தமிழ் அறிவித்த கலைஞருக்கு” என்று சொல்லி சமர்ப்பணம் செய்வார். இந்த சீண்டலைத் தாண்டியும் இவர் எழுத்து தமிழகத்தில் மனதளவில் போராட்ட ஆதரவு கொண்டிருந்த வாசகர்களுக்கு  கூட ஒருவித ஆசுவாசத்தை அளித்தது என்றும் கூறலாம். உச்சக்கட்டப் போரில் லட்சிய தரப்பு தோல்வியடைவது என்பது ஒரு சோர்வுக்கும் ஏமாற்றத்திற்கும் இட்டுச்செல்வது. அந்த சமயத்தில் அதிலிருந்து மனரீதியாக  மீண்டு வர இவரது புத்தகங்கள்   ஓரளவிற்கு உதவி செய்தன என்றே சொல்லவேண்டும். அதீத ஒழுக்கத்தை தியாகத்தை பகடி செய்வது என்பது அது உருவாக்கிய மனப் பதட்டடத்தை ஈடு செய்வதும் கூடத்தான். அந்த விதத்தில் புகை பிடிப்பது மது அருந்துவது போல ஒரே சமயத்தில் ஆசுவாசம் அளிப்பது மற்றும்  உள்ளே செல்லரிப்பது  என்கிற வகையில் இவர் கதைகள்  திகழ்ந்து வந்தன.  

எழுத்தாளனுக்கு சீண்டும் உவகை கொடுக்கின்ற உத்வேகம் என்பது, தன்  எதிர் தரப்பு ஆற்றலுடன்  இருக்கும் சமயத்தில் வெளியாகும் கதைகளில் மிக காத்திரமாகவே வெளியாகிறது. ஷோபாசக்திக்கு தேசத்துரோகி, எம்ஜிஆர் கொலைவழக்கு,  கண்டிவீரன் ஆகியவற்றில் மிக தீவிரமாக பாய்ந்து வெளியான அந்த உணர்வு மூமினில் சற்று முதிர்ந்து அமர்ந்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இந்த தருணத்தில் சொல்லிக் காட்டி கிண்டல் செய்வதை தவிர்த்தது,  அவரை இன்னும் மனத்துக்கு நெருக்கமாகவே வைத்திருக்கிறது.  ‘தீபன்’ திரைப்படத்திற்கு பிறகு முன்பிருந்த தீவிர எதிப்பு இல்லாமல் அடக்கி வாசிக்கும் உணர்வு இருக்கிறது. தீபனுக்குப் பிறகான ஷோபாவின் எழுத்துக்களை இரண்டு விதமாகவே பிரிக்கலாம். ஒன்று அவரது கதைப் பின்புலத்தில் உருவாகிய மாற்றம், மற்றது கதைசொல்லலில் உருவான மாற்றம்.  இவற்றை ஒரு விமர்சனமாக  அல்லாமல் ஒரு அவதானிப்பாக மட்டுமே முன்வைக்கிறேன். அவ்விதத்தில் தீவிர எதிர்ப்பியலைக் கடந்து ஒருவித கனிந்த மனதோடு வந்திருக்கும் கதைகளாக மூமின்  தொகுப்பைச் சொல்ல முடியும். அதே சமயம் தொடர்ச்சியாக இவரது சிறுகதைகளை வாசித்து வரும் ஒரு வாசகனுக்கு ஒருவித ‘ரெக்னிக்’ புரியவும் வருகிறது. இவரது தொகுப்பின் பத்து கதைகளில் ஒரு கதை இயக்கத்தை நேரடியாக பகடி செய்யும், ஒன்று அப்பாவி மக்களிடையே திகழும் கையறு நிலையை காட்டும், ஒன்று  பெண்மையின்  உன்னதத்தை நிலைநிறுத்தும். பத்தில் இரண்டு உன்னதம், மூன்று மக்களின் கையறு நிலை, இரண்டு இயக்கியத்தை / அரசியலை சீண்டும் என்கிற அளவில் திகழும். கதைகள் பெரும்பாலும் அபத்த சூழலும் அங்கத சித்தரிப்பும் கொண்டிருக்கும். அந்த அவுட்லைன் இதிலும் தொடர்கிறது.

ஈழ அரசியல் குறித்த புரிதல் இல்லாத ஒரு தமிழக நண்பர் தீபன் படத்தை பார்த்துவிட்டு இதில் நாயகன் ‘புலியாகவே வாழ்ந்திருக்கிறார்’ என்றார். ஷோபாவின் அரசியல் நிலைப்பாடு புலிகளுக்கு எதிரானதாவே இருந்தது என்பது இலக்கிய வாசகருக்குத் தெரிந்த அளவு  திரைப்பட ரசிகர்களுக்குத் தெரியாது. ஆனாலும் அவர் சொன்ன “புலியாகவே வாழ்ந்திருக்கிறார்” என்கிற காமெண்ட்டில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை. தீபனுக்கு முன்பு இருந்த ஷோபாசக்தியின் படைப்புகள் அதற்குப் பின்பான படைப்புகள் என்று அதை ஒரு மையமாக கூட வைத்துவிட முடியும். அல்லது இறுதிப்போருக்குப் பிறகான ஷோபாவின் எழுத்துக்கள் என்றும் வைக்கலாம்.  இயக்கம் தனது அதிகாரத்தை முற்றிலும் இழந்த பிறகு ஷோபா சக்தி எழுதி வெளியான இந்த மூமின் தொகுப்பில் இயக்கம் மீதான தீவிர எதிர்ப்போ, அல்லது கரித்துக்கொட்டுவதோ இல்லை. மாறாக ஒருவித குற்ற உணர்ச்சி  வெளிப்பாடும் பாவமன்னிப்பு கேட்டு மருகும் பாவனையாக இருக்கிறது.  நண்பர் சொன்னது போல திரைப்படத்தில் “வாழ்ந்து விட்டதால்” ஒருவேளை, இத்தகைய வெளிப்பாடு இருக்கிறதா என்றும் தோன்றுகிறது.  ஏனென்றால் முந்தைய கதைகளில் “துப்பாக்கிச் சத்தம் கேட்டால் எவ்வாறு ஒடி ஒளிந்து கொள்ள வேண்டும் என்று இயக்கம் கற்பித்திருந்தது ” என்றும்  ( கண்டிவீரன்) புலிகளின் சித்ரவதை கூடம் எப்படி இருக்கும் என்றும் ( கப்டன்) பண்ட பாதத்திரங்களை திருடிப் போன திருடன்  போய், இப்பொழுது குதிரையில் வரும் வீரர்கள் திருடிச் சென்றனர் என்றும் ( பரபாஸ்) இருந்த சீண்டல் இதில் இல்லை.  மாறாக ஒருவித ஆழ்ந்த நிறைவையே  அளிக்கின்றன என்பதை குறிப்பிட்டுச்  சொல்ல வேண்டும். அது மெல்லியதாக சுட்டிக் காட்டப்படும்   யானை கதையுமே கூட  ‘வித்ரோ ஜோசப்பின்’ ஆளுமையையே கண்முன் காட்டுகிறது.

இந்த தொகுப்பில் ஒன்று  கிறிஸ்துவை தண்டித்த (அந்திக் கிறிஸ்து ) அதிபர் குறித்த கதையாகவே வெளிப்பட்டிருக்கிறது. மேலும் இரு கதைகள் நேரடியாகவே ஒருவித  பாவமன்னிப்புத்தனம் கொண்டிருக்கின்றன. ஒன்று பிரபஞ்ச நூல் என்கிற கதை மற்றது காயா என்கிற கதை. இரண்டிலும் அவனுக்கு அந்த மன்னிப்பு கிடைக்கப் பெறுகிறது. அவன் அந்த ஆறுதலும் கிடைக்கப் பெறுகிறான் என்பது நெகிழ்ச்சியூட்டவும் செய்கிறது. காயா கதையில் அந்த நண்பன் கதாபாத்திர வர்ணனை வாசிப்பவரை மிகவும்  தொந்தரவு செய்வது.  கதை  சொல்வதில் ஷோபா கொண்டிருக்கும் அசாத்திய திறன் வெளிப்படும் கதை இது. இந்தத் தொகுப்பின் மற்றோரு கதையான அம்மணப்பூங்கா கதையை முந்தைய தொகுப்பின் ரூபம் கதையின் தொடர்ச்சியாகவே  கருதிக் கொள்ள  முடியும் அல்லது அதன் வேறொரு பரிணாமமாக. போராட்டத்தில் உறுப்புகளை இழந்த  முன்னாள் போராளியின் வேதனை முந்தைய ஒன்று. அவன் இயக்கத்தில் இருந்ததால் பிற்காலத்தில் கவனிப்பாரற்றுப் போகிறான்.  பிந்தைய கதையான  இதில் ( அம்மணப்பூங்கா ) வருபவன் ஒரு சாமானியன். ‘1984’  புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும் சித்தரவதை கூட்டத்தில் சாப்பிட்டவன்.  ஒரு உந்துதலில்  போராட்டத்தில் தன்னை அழித்துக் கொள்ளச் சித்தமானவன் அவன்.  எரிந்த நிலையில் காப்பாற்றப் படுகிறான். அதன் பின் அவன் சமூகத்திற்கு சுமையாக மட்டுமே ஆகிறான் என்கிற வேதனையை பதிவு செய்கிறது. அவன் தன் இருப்பின் மூலம் பழைய  சம்பவங்களை  நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறான். அது நோக்கி நினைக்க விரும்பாத மக்கள் அவனை கண்டுகொள்வதில்லை. அந்தப் போராட்டத்த்தில் அவன் இறந்திருந்தால் இந்நேரம் வீரனாக நினைவில் நின்றிருப்பான். அவனை எரிய விடாமல் காப்பாற்றிய சமூகம்தான் அவனை கண்டுகொள்ளாமல் விடவும் செய்கிறது.  மேலும் அவன் தியாகம் மீது சாதாரண உலகியல் காரணங்கள் ஏற்றப்படுகின்றன.   இந்த தொகுப்பின் மிக ஆழமான கதை இது.  மிக உள்ளக விசாரணை என்கிற கதையும் இதற்கு ஒப்பானதே. நினைவுகளைக் கிளறுபவனை யாரும் கவனப்படுத்த விரும்புவதில்லை.

ராணிமகால் கதையில் வரும் அன்னராணி ஒரு குறியீட்டு முக்கியத்துவம் பெற்றவளாக வருகிறாள். அழகும் மிளிர்வும் நிமிர்வும்  கொண்டவள் அவனை ஆட்கொண்டவன் அவ்வளவு ஆளுமை கொண்டவன் அல்ல. தன் ஆளுமையைக் காட்டும் பண்டமாகவே அவளை நினைக்கிறான். இங்கு ஒன்று கூறலாம். தீபனுக்குப் பிறகான மாற்றம் என்று குறிப்பிட்ட ஒன்று  அவரது கதை சொல்லலில் உருவான மாற்றம் என்பது. அதை இவ்விடத்தில் விளக்கலாம்.  அவரது முந்தைய  கதை சொல்லல் பாணி என்பது முழுக்க ஒரு எழுத்தின் அழகியல் சார்ந்து இருந்தது. ஆனால் இந்தத் தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் அதை காமிரா கோணத்துடன் காட்சியாக காட்டும் அளவு இருக்கிறது. அன்னராணி தன் கணவனின் உடலிலிருந்து சாவியை எடுத்து தன மகன் வீடு செல்லும் வரையிலான வர்ணனை ஒரு குறும்படம் காணும் உணர்வை உண்டாக்குகிறது.

இவற்றுடன் ஒப்புநோக்கத் தக்க மற்றோன்று மூமின் கதை.  மூமின் கதையின் சஸ்பென்ஸ் என்ன என்பதை இறுதிவரை எழுத்தாளர் கொண்டு சென்றாலும் அது  முதலிலேயே வெளிப்பட்டுவிடுகிறது. சொல்லப்போனால்  தீபன் படத்தின் முதற்காட்சியே இதுதான். ஆனால் இது சஸ்பென்ஸ் கதையும் அல்ல ஷோபா சக்தி க்ரைம் கதை எழுத்தாளரும் அல்ல என்பதால் அந்த சஸ்பென்ஸ் தெரிந்தாலும் அந்தக் கதை வாசிக்கக் கூடிய ஒன்றாகவும் அந்த பாத்திரங்கள் மனதிற்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கின்றனர்.

ஒரு படைப்பாளி அல்லது கலைஞன் தான் சொல்ல விரும்பும் ஒன்றை உரக்கச் சொல்கிறான். ஆனால் மக்கள் மத்தியில் எடுபடுவதாய் இல்லை. அவனால் அதை செயல்படுத்த இயலவில்லை. அவன் மன்றாடுகிறான். ஆனால் சமூகம் அவனை கேட்பதாக இல்லை. அவனை அது பித்தனாக்குகிறது. அவன் பித்தனான பின்னால் கடும்சொல் சொல்லி சமூகத்தை திட்டத் துவங்குகிறான். அப்பொழுது மக்கள் அவனை பின் தொடர்கிறார்கள். அவன் வசைகளை ஆசையாக பெற்று பூரிப்படைகிறார்கள். இந்த அபத்த சூழலை  வர்ணிப்பது ஷோபாசக்திக்கு அனாயாசமாக வரக்கூடியது.  அவ்வகையில் யாழ்ப்பாண சாமி கதை அவருடைய பிரத்யேக பாணி. இது போன்ற உரையாடல்களாக இல்லாமல்   ஒரு அபத்த சூழல் வர்ணனையாக மனிதனின் குரூரத்தை  வர்ணிக்கும்  அரம்பை கதையும் அத்தகையதே. துன்பமோ இன்பமோ, ஆனால் பழைய நினைவுகள் எப்பொழும் இனிமையானவையே என்று ஒரு மேட்டிமைவாதத்தை, பழிவாங்கலை சாடுகிறது 

பெரும்பாலான   ஈழ எழுத்தாளர்களின் எழுத்து, வாழ்க்கைப் போராட்டத்தை  அடிப்படையாக கொண்டிருப்பவை. வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்பவே எழுத்தின் பாதிப்பு நிகழ்கிறது.  அதிகம் தமிழக எழுத்தாளர்கள் மிகவும் அகச்சிக்கல் கொண்டும்   ஈழ எழுத்தாளர்கள் அதிகம் புறம் சார்ந்தும் வெளிப்படுகின்றனர்.  ஷோபா சக்தியின் எழுத்துக்கள் இதில் ஒரு மீறலைக் கொண்டிருந்தவை என்று கூறலாம். அவரது எழுத்தின் பாதிப்பு  என்பது தமிழகம் ஈழம் என்கிற எல்லையைக் கடந்த ஒன்று. இரு நிலங்களிலும் அவருக்குப் பிறகு எழுத வந்த எழுத்தாளர்களுக்கு  ஒரு முன்னோடியாகவும்  விளங்குகிறார்.    மீறல் குணம் கொண்டிருந்தாலும்,  தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தாலும் ஒரு ஊஞ்சல் அல்லது ஒரு பெண்டுலம் போல அரசியல் என்னும்  ஒரு சட்டகத்துக்குள்ளே இரு  எல்லைகளுக்கு இடையே  ஆடுபவையாகத்தான் ஷோபாவின் சிறுகதைகள் இருந்திருக்கின்றன.  ஆனால் மூமின் வாசித்த பிறகு தோன்றுகிறது, இனிமேல் அவர்   தனக்கான அந்த எல்லையையும் மீறக்கூடும் என்று.

ஆர். காளிப்பிரஸாத்

சிறுகதையாசிரியர். இலக்கிய விமர்சனங்கள் எழுதுவதிலும், மொழியாக்கங்களிலும் ஆர்வம் கொண்டவர். இவரின் சிறுகதைகள் ‘ஆள்தலும் அளத்தலும்’ என்ற தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளது, ‘தம்மம் தந்தவன்’ என்ற நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

உரையாடலுக்கு

Your email address will not be published.