/

அகழ் : நூல் அறிமுகங்கள்

குரவை – சிவகுமார் முத்தய்யா

இந்த  நாவல் கீழ் தஞ்சையில் உள்ள தப்படிச்சான் மூலை என்னும் ஊரில் வாழும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை  பேசுகிறது. கதை தொண்ணூறுகளில் நிகழ்ந்தாலும், கதை மாந்தர்களின் கடந்தகால நினைவுகளை  முன்னும் பின்னும் சொல்லிச்செல்கிறது.

நாவலின் முக்கிய பேசு புள்ளிகள்: நாட்டுப்புற கலைஞர்களின் குடும்ப வாழ்க்கை, நாட்டுப்புற கலைக்கும் கலைஞருக்கும் உள்ள உறவு , எல்லா மனிதனுக்கும் கடைசியில் ஒரு இடம் கொடுக்கும் தப்படிச்சான் மூலை என்னும் நிலம் , நான்காவதாக இந்த நாவல் காட்டும் வாழ்க்கையிலிருந்து நாம் கேட்கக்கூடிய வாழ்க்கை சார்ந்த அடிப்படை கேள்விகள்.  

நாவலில் இரண்டு விதமான மனிதர்கள் வருகிறார்கள். ஒன்று இந்த கலை வாழ்க்கையில் உள்ள அனைத்து சிக்கல்களுடன் வாழும் நித்யா,குமரேசன்,சித்ரா போன்ற நிகழ்கால கலைஞர்கள். மற்றொன்று வாழ்ந்து முடித்த நாகு, பேபி,பெரியநாயகம் போன்ற கடந்த கால கலைஞர்கள்.

நாவலின் முதல் அத்தியாயம்  ஒரு நடனக்கலைஞன் தனது கடைசி காலத்தில் தனிமையின் விரக்தியில்  வேளாங்கன்னி மாதா கோவிலுக்கு செல்வதாக ஆரம்பிக்கிறது. தனது பயணத்தில் அவன் வாழ்ந்த வாழ்க்கையை திரும்பிப் பார்க்கிறான். தோல்வியுற்ற காதல், பெரிதாக ஒன்றையும் சாதித்திடாத வெறும் வயிற்றுப் பாட்டுக்கு மட்டும் பயன்பட்ட அவனுடைய நடனக்கலை , கல்வி பெற்று நகரங்களுக்கு சென்று விட்ட  பிள்ளைகள். வயோதிகத்தால் வாய்ப்புகளும் முன் போல் கிடைக்காததால்  வறுமையில் வாழ்கிறான். எஞ்சி இருப்பது தனிமையும் காயங்களும் மட்டுமே. 

இந்த நாவல் காட்டும் பெரும்பாலான கலைஞர்களின்  வாழ்க்கையில் திருமண உறவு மீறல் இயல்பாக இருக்கிறது. அதனால்  அவர்களுக்கு முறையான திருமண உறவுகள் அமையாமல் ஏமாற்றமும் , கசப்புமே எஞ்சுகிறது. நிரந்தரமில்லாத பொருளாதார சூழல், பாதுகாப்பற்ற வாழ்க்கை என இவர்களுடைய அகமும் புறமும் ஒரு நிலையற்ற தன்மையிலேயே உள்ளது. 

சிங்காரம் போன்ற ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்களுக்கு இந்த கலை வெறும் தொழில் மட்டுமே, மக்களை மகிழ்விப்பது மட்டுமே அவர்களின் பிரதான நோக்கம். 

இந்த கலை முற்றிலும் உடல் வலிமை சார்ந்ததாக இருப்பதால், வயோதிகத்தில் தொழில் வாய்ப்பின்றி வறுமை நோக்கி தள்ளப்படுகிறார்கள்.  ஆட்டகாரிகளை  பொறுத்தவரை புகழ் இருக்கும் போதே நாலு காசு பார்த்துவிட வேண்டும் என்பது தான் அவர்களை செலுத்தும் விசை.. ஆனால் ஒரு காலத்தில் புகழின் உச்சத்தில் இருந்த பேபி , வசந்தா போன்ற கதாப்பாத்திரங்களும் வறுமையில் இருப்பதை காண முடிகிறது.

அனைவராலும் பகடிக்குள்ளாக்கப்படும் பபூன் நடிகர் ஆல்பர்ட் என்ற கதாப்பாத்திரத்திற்கு  பெண் பார்க்க செல்லும் நிகழ்வு நாவலில்  முக்கியமான இடம். புகழின் உச்சியில் இருக்கும் பேரழகி நித்யா ஆல்பர்டை திருமணம் செய்து கொள்கிறாள்.  இது போன்ற எந்தவகையிலும் விளக்கமுடியாத  வாழ்க்கை விந்தைகளை இந்த நாவல் காட்டிச்செல்கிறது. 

பல்வேறு வகையான கலைஞர்களின் வாழ்க்கைப்பாடுகளின் சிக்கல்களை, அவர்களது கைவிடப்பட்டதன்மை, ஒழுங்கின்மை இவற்றையே அதிகமாக சித்தரித்திருக்கும் இந்த நாவலில் கலையின் சாராம்சத்தை  சுட்டும் இரண்டு சம்பவங்கள் இந்த நாவலை எனக்கு அணுக்கமாக ஆக்கியது.   

ஒன்று, பறைக்கலைஞனான ‘பொட்டு’ தன்  பறையை விற்கவேண்டிய நிலை வருகிறது. ஆனால் விற்பதற்கு  முன் ஈட்டி மாணிக்கம் சாமிக்கு சாராயம் சேவல் படையல் வைத்து வணங்கிவிட்டு தருவது  நாவலில் நான் ரசித்த பகுதிகளில் ஒன்று.

இரண்டு  கணேசலிங்க பண்டிதர் என்ற கதாப்பாத்திரம் பறையின் தொல் வரலாற்றைப் பற்றி சொல்வது. தாமரை இலையில் விழும் மழை துளியின் ஓசையிலிருந்து பறை உருவாக்கப்பட்டது போன்ற உவமைகள்.

இந்த நாவலில் கலைஞர்களின் வாழும்  இடமான  ‘தப்படிச்சான் மூலை’ ஒரு படிமமாக உருவாகி வருகிறது. மற்றவர்கள் அந்த ஊரைப் பற்றி பேசும் போது ‘நாலாஞ் சாதி’ பய ஊர் என்றே அழைக்கிறார்கள். அங்கு வாழும் கலைஞர்கள் திருமணம் மற்றும் வீட்டு விசேஷம் போன்ற மங்கள நிகழ்வுகளுக்கு அழைக்கப்படுவதில்லை.

படித்த குடும்பத்தை சேர்ந்த சித்ரா குடும்ப சூழ்நிலையால் தப்படிச்சான் மூலைக்கு வர நேர்வதும், பின் தன் தோழி மூலம் ஆட்டக்காரியாகவும் மாற நேற்கிறது. இவ்வாறு தப்படிச்சான் மூலை எல்லா மனிதர்களும் கடைசியாக சென்று சேரும் இடமாக இருக்கிறது. 

பிரதான கதாப்பாத்திடங்களான நாகு , பெரியநாயகம், வசந்தா போன்ற வாழ்ந்து முடித்த கலைஞர்கள் தனிமையில் இருப்பதை காண முடிகிறது. சமீபத்தில் விவாகரத்து பெற்றவர்கள் பற்றிய  ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் , விவாகரத்து பெற்ற இருவர் ஒரே கருத்தை கண்ணீருடன் முன் வைத்தனர், தங்களால் இரவின் தனிமையை கடக்க முடியவில்லை என. அதே வரியை நாவலின் முதல் அத்தியாயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நடனக்கலைஞனும் சொல்கிறான். தனிமையின் துன்பம் தாளாமல் நாகு போன்றவர்கள் மதுவில் மீட்பு தேடிக் கொள்கிறார்கள். வசந்தா தற்கொலை வரைக்கும் செல்கிறாள்.

நாட்டுப்புறக்கலை சார்ந்த தரவுகள் நாவலுக்கு பின் உள்ள ஆசிரியரின் உழைப்பைக் காட்டுகிறது. உதாரணமாக தப்படிக்க பயன்படும் செடிகளின் (பூவரசு , அழிஞ்சை) பெயர்கள், இரண்டு குட்டி போட்ட ஆட்டு தோலில் பறை செய்யப்படுவது, நடனம் ஆடும் பெண்களும் தவில் வாசிப்பவர்களும் தவில் மற்றும் சலங்கை இசையிலே பேசிக்கொள்வது என நிறைய தகவல்கள் உள்ளன.

மயில் ராவணன் கொலைக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க சந்திரன் செல்வது, அது வரை உள்ள நாவலின் யதார்த்த கதைப் போக்கிலிருந்து நாவலின் உணர்வு சற்று மாறி இருக்கிறது. இறுதியாக,  இந்த கலை நோக்கி வெவ்வேறு காரணங்களால் மனிதர்கள் வருகிறார்கள். சிலர் ஆர்வக்கோளாறு காரணமாக, சிலர் குடும்ப சூழ்நிலையால், சிலர் இது பற்றி முழுவதும் தெரிந்தே வருகிறார்கள். இவர்களது வாழ்வில் பொருளாதாரம், பாதுகாப்பு, சமூக ஏற்பு என பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் , அடிப்படையில் இந்த வாழ்க்கையில் ஒரு மீறல் தன்மை உள்ளது. உதாரணமாக பெற்ற மூன்று மாத குழந்தையை  விட்டுவிட்டு சினிமாவுக்கு நடிக்க சென்று காணாமல் போகும் ஒரு ஆட்டக்காரி. 

இந்த நாவல் சித்தரிக்கும் பல்வேறு வகையான கலைஞர்களின் நிலையற்ற, உறவுகள் அற்ற, மது போன்ற கட்டற்ற போதைக்கு அடிமையானவர்களின் தனிவாழ்க்கையை வாசிக்கும்போது ’ஹெடோனிசம்’ என சொல்லப்படும் தன்னிச்சையான  மீறல் வாழ்வை வாழும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சென்று சேரும் இடம் என்ன?  என்ற  கேள்வி எழாமல் இல்லை. இந்த நாவல் காட்டும் தப்படிச்சான் மூலையில் காண்பிக்கப்படும் வாழ்க்கை இன்று இருக்கிறதா? என தெரியவில்லை , ஆனால் ஐம்பது வருடம் கழித்து வாசிக்கும் ஒரு வாசகனுக்கு நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கை பற்றிய ஒரு முக்கிய ஆவணமாக இந்த நாவல் இருக்கும்.

யாவரும் பதிப்பக வெளியீடு                  

நவீன் சங்கு
கட்டுரையாளர்.

000

நீலகண்டம் – சுனில் கிருஷ்ணன்

“இந்நாவல் ‘ஆட்டிசம்’ பற்றிய நாவல் அல்ல. ‘ஆட்டிச’ வாழ்வை ஆவணப்படுத்துவது இதன் முதன்மை நோக்கம் அல்ல. ‘ஆட்டிசம்’ ஒரு பின்புலம் மட்டுமே.” என்று முன்னுரையிலேயே எழுத்தாளர் கூறிவிடுகிறார். நாவலில் வரும் செந்தில் தனக்கு குழந்தை பிறக்காத பொழுதும், தானே தேர்தெடுத்த ஒரு குழந்தை பின்னாளில் ஆட்டிச நிலைபாடு கொண்ட பெண்ணாக மாறும் பொழுதும் தன் வாழ்வில்  தற்செயலை சந்திக்கிறான். அந்த தற்செயலுக்கு அவன் எதிர்வினையாற்றுவதே இந்நாவல் என்று ஒருவகையில் சொல்லலாம். செந்தில் தற்செயலை எதிர்கொள்கையில் அவன் தான் மட்டுமின்றி தன்னை உருவாக்கிய மரபையும் சமூகத்தையும் சேர்த்தே அறம் என்பதற்குள் பொருத்திப் பார்க்கிறான். அவன் சென்றடையும் இடம் அவர்களது மனநிலையை, செயலை, அவர்கள் நம்பும் அறத்தை பரிசீலிக்க செய்கிறது. ஒரு கோணத்தில், தன் அனுபவத்தைக் கொண்டு வரலாற்றை பிளந்து செல்லுதல். அது, தலையில் தேக்கிச் சென்ற மதிப்பீடுகளுடன் முட்டிக்கொள்ளுதல். தத்து எடுத்தல் சாதாரணமாக உள்ள நாட்டுப்புறத்தார் பின்புலம் கொண்ட செந்தில் வேறொருவரின் விந்தணு கொண்டு பிள்ளைப் பெறுதலை மறுப்பதையும், தான் பிராமண குடும்பம் தத்து எடுத்த ஒரு குஜராத்தி பெண் என்று அறிந்தும் ரம்யாவின்(செந்திலின் மனைவி) அம்மா வரலக்ஷ்மி ரம்யாவின் திருமணத்தை எதிர்ப்பதையும் இணையாக பார்க்க முடிகிறது. 

நாவலில் வருவது போல நாம் சதுரங்களை உருவாக்கி அதற்குள் நாம் பத்திரமாக இருக்கும் பொருட்டு சிலவற்றை வெளி நிறுத்துகிறோம். நாம் அச்சதுரத்திற்குள் நின்று வெளி விலக்குபவை ஒரு நொடி பொழுது நீங்காமல் நம்மேல் கனக்கின்றன. காலந்தோறும் அச்சதுரம் மீள் வரையரை செய்யப்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் எவ்வளவு முயன்றாலும் நாம் ஏதோ ஒன்றை விலக்க வேண்டியுள்ளது, சிலவற்றை தான் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. அதன் பிறகு நாம் தேர்தெடுக்காதவற்றால் பீடிக்கப்படுகிறது நமது வாழ்வு. நாவலில், தந்தையால் கைவிடப்பட்ட சீராளனும், தன் மகளை காப்பாற்றப் பிற குழந்தைகளை கொன்ற ரயில் ஓட்டியும் அதற்கு பின் தாங்கள் தேர்தெடுக்காதவற்றால் துரத்தப் படுகிறார்கள். இந்நாவலில் வரும் விக்ரமாதித்யன் மேல் தொற்றிக்கொள்ளும் வேதாளம் அவனுக்கு தான் விலக்கப்போகிறவற்றின் கனத்தை சுட்டிக்காட்டுகிறது. அதை முதுகில் சுமந்தலையும் விக்கிரமாதித்யன் ரணப்பட்டுக்கொண்டே அதற்கு செவிசாய்க்க வேண்டியுள்ளது. சதுரங்களை மறு உருவாக்கம் செய்யவேண்டியதைப் பற்றி இந்நாவல் பேசுவதைவிட, அதற்குள் மாட்டிக்கொண்டு ரணமாகும் விக்கிரமாதித்யன் செந்தில் போன்றோர்களை பற்றியே பேசுவதாக தோன்றுகிறது. விக்கிரமாதித்யனுக்கு வேதாளத்தின் கனத்தை விட அது சொல்லும் கதைகளில் உள்ள விலக்கப்படுபவர்களின் கனமே தாங்கமுடியாததாக இருக்கிறது. நாவலில், செந்தில் தன் இளவயதில் பார்த்த சமூகம் விலக்கிய இயல்பு நிலை தவறியர்கள் முதல் தன் மூதாதை அண்ணாமலை விலக்கிய நாகம்மை வரை அவன் மேல் தொற்றிக்கொள்கின்றனர். தன் மூதாதை அண்ணாமலை புறக்கணித்த பச்சை பாவாடை அணிந்த நாகம்மை, தற்போது பச்சை பிராக் அணிந்த வர்ஷினியாக செந்திலிடம் திரும்பிவந்துள்ளாள். நாவலில், ஓரிடத்தில் செந்தில் தனது மரபையும், அது தந்த மதிப்பீடுகளையும் தீராப் பசியுடன் உண்ணும் சிதல் என வருகிறான். அப்பகுதி பின்பு தனிச் சிறுகதையாக வளர்ந்துள்ளது. நாவலுள் நாடக வடிவில் சுடலைக்கும் மெடியாவிற்குமான உரையாடல் வருகிறது. தங்களது ஆணவத்திற்காக பிள்ளைகளை பலி கொடுத்த அவர்களையும், பிறருக்கு முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற சமூக அந்தஸ்துக்காக வர்ஷினியை தத்து எடுத்த இரம்யாவையும், வேறொருவரின் விந்தணு கொண்டு குழந்தை பெற்றுக்கொள்வதை மனதிற்குள் வைத்து அல்லற்பட்டு வர்ஷினியை தத்து எடுத்த செந்திலையும் ஒன்றாக பார்க்க முடிகிறது. 

தேவர் அசுரராவதும், அசுரர் தேவராவதும், மூத்தோள் அமங்கலை ஆவதும், நஞ்சை விழுங்குவதும் உமிழ்வதும் தேர்வுகள் தான். தேர்வுகளை காட்டிலும் கைவிடப்பட்டவையே நம்மை கனவுகளில் வேட்டையாடுகின்றன. கைவிடப்பட்டவை நம் கண்டத்திலேயே உறைந்து விடுகின்றன, நம்மால் வெளிக்கொட்டவும் செரிக்கவும் முடியாத நஞ்சென உறைகின்றன. அந்நஞ்சை வெளிக்கொட்டவும் செரிக்கவும் முடியாது தத்தளிப்பவர்களே சதுரங்களை மீள்வரையறை செய்கிறார்கள். இறுதியாக நாவல், “விக்கிரமா! ஒரு நிமிடம், நோக்கமற்ற கிறுக்குத்தனத்தை ஊழ் என்றும் கதையென்றும், கலையென்றும் எப்படியும் அழைக்கலாம். ஆகவே எதிர்கொள்க, நிலைகொள்க, அமைதியுறுக. ” என்ற கட்டத்தை அடைகிறது.  

நாவலில் கையாளப்பட்டுள்ள புனைவுக்குள் புனைவு, பல கதைசொல்லிகள், பல கோணங்களில் ஒன்றை புனைவது, நேர்கோட்டில் நிகழ்வுகள் இல்லாதது பின் நவீனத்துவ கூறுகளாக இருந்தாலும், அவற்றுக்கு நமது காவிய, நாட்டார் மரபுகளிலும் இடம் உண்டு என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். இந்த விதமான கதைக்கூறல் முறையே ஒரு புனைவுக்கும் மற்றொரு புனைவுக்கும், ஒருவரின் கோணத்திற்கும் மற்றொருவரின் கோணத்திற்கும், ஒரு கதாபாத்திரத்திற்கும் மற்றொரு கதாபாத்திரத்திற்கும் இடையில் உள்ள எல்லைக்கோடுகளை அழிக்கிறது. சிறுத்தொண்ட நாயனார் கதை பண்பாட்டு தலைகீழாக்கமாக மட்டுமே இல்லாமல் நாவலின் ஓட்டத்துடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாவலின் இறுதி பக்கத்தில் மொத்த நாவலுமே வர்ஷினி எழுதியது என்று சொல்லப்படுகிறது. நாவலுக்கிடையில் வர்ஷினியின் பார்வையில் வரும் சோட்டா பீம், நீமோ, நீல யானை பொம்மை போன்ற அத்தியாயங்களை இது நியாயப்படுத்துகிறது(அது நியாயப்படுத்தப்பட வேண்டுமா என்பதும் கேள்வியே), ஆனால் இது நாவலை மேலும் விஸ்தரிக்கிறதா வேறு தளம் நோக்கி நகர்த்துகிறதா என்பதைப் பற்றி யோசிக்க வேண்டும். நாவலில் வரும் ஹரி, நந்தகோபால் கதாபாத்திரங்கள் அவை நாவலுள் வந்துவிட்டன என்ற காரணத்தினாலேயே அவற்றுக்கு ஒரு கதை அளிக்கப்பட்டுள்ளதா என்பது பற்றியும் யோசிக்கவேண்டும். ‘ஒரு புனைவில் எழுப்பப்படும் எல்லா எதிர்பார்ப்புகளும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்த படைப்பில் திருப்தி செய்யப்பட வேண்டும்’ என்பதற்காக அவற்றின் கதைகள் எழுதப்பட்டுள்ளனவா என்பதும் கேள்விக்குரியதே. 

இரண்டு வாசிப்புகளுக்கு பிறகு மிகவும் அணுக்கமாக உணர்ந்த நாவல் நீலகண்டம். “The last temptation of Christ’ நாவலில், ஜூடாஸ் இயேசுவை கொல்ல கத்தியுடன் நிற்க இயேசு அவரது கழுத்தை அவன் முன் காட்டுவார். ஜூடாஸ் அவரைக் கண்டு அருவருத்து, “இப்படிப்பட்ட ஒருவரை எப்படி ஒரு மனிதன் துன்புறுத்துவான்? ” என்பான். அதற்கு இயேசு, “ஆம், மனிதனால் முடிவதில்லை. ஆனால் கடவுளால் முடிகிறது.” என்பார். உலகில் இத்தனை வல்லமை வாய்ந்த மலைகளும், கடல்களும், காடுகளும், உயிரினங்களும் இருக்கையில் மனிதன் மட்டுமே வேதாளத்தை சுமக்க விதிக்கப்பட்டவன்.

யாவரும் பதிப்பக வெளியீடு

– சியாம்
எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்.

000

”மறைமுகம்”ஜா தீபா

“இடர்களையா ரேனும்
எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா
ரேனும் -சுடர்உருவில்
என்பறாக் கோலத்
தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்னெஞ் சவர்க்கு”

எத்தனை புறக்கணிப்புகள் இருந்தாலும் என் அன்பு  துளியளவும் குறையாது என உருகி சொல்லுகிறது காரைக்கால் அம்மையின் அற்புத திருவந்தாதி பாடல். இப்பாடல்களை பொருள் கொள்ளுவதை போன்றே தீபாவின் சிறுகதைகளை அணுக இயலும்.

மறைமுகம் தொகுப்பில் உள்ள பத்து சிறுகதைகள் யாவும் பெண்களின் புறசூழலை மையமாகக்கொண்டு நகர்கின்றன. வெளியுலக அழுத்தங்களுக்கு பெண்ணின் உளவியல் எப்படி ஆட்படுகின்றது, மீட்சிக்கான  பாதைகளை பெண் பாத்திரங்கள் எப்படி கண்டடைகின்றன போன்றவை இக்கதைகளின் திசையை தீர்மானிக்கின்றன.

இத்தொகுப்பின் பெண்பாத்திர கட்டமைப்பு தமிழ் சிறுகதை பரப்பில் நிகழ்ந்த முக்கிய உயரங்களில் ஒன்று.  உதாரணமாக கணவனின் இறுதிச்சடங்கில் திகைத்து அமர்ந்திருக்கும் பார்வையற்ற பெண் மணிமாலா கணவனின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக காவலர்களால் விசாரிக்கப்படுகிறாள்; காணாமல் போன தன் தம்பியை ரயில் நிலையங்களில் தேடி அலையும் வாசுகி, தொலைந்து போனவர்கள் பற்றிய சுவரொட்டிகளை கடந்து போகும் போதெல்லாம் அந்த முகங்களை நினைவில் தேக்கிக்கொள்கிறாள்; வார்த்தைகளால் சொல்லப்படாத தன் காதலையெல்லாம் தான் பார்த்துவந்த சினிமா  டிக்கெட்டுக்களாய் சேமித்து வைத்திருக்கும் கருணா, ஆண்டுகள் கடந்தும் தன் காதலை வெளிப்படுத்த இயலாமல் டிக்கெட் பெட்டியை பரண்மேல தூசி படிய விட்டுவிடுகிறாள்; கொடிய விபத்தில் சிக்குண்டு அதன் அதிர்வுகளிலிருந்து விடுபடாமல் தவிக்கும் காசி மீண்டு ஓர் விபத்தின் மூலம் தற்சிறையிலிருந்து தன்னை விடுவித்து கொள்கிறாள்; மைந்தர்களை பலிகொடுத்து கல்லாகி அமர்ந்திருக்கும் திரௌபதியிடம் பிள்ளை வரம் கேட்கும் பேச்சி கலக்கம் கொள்கிறாள்; நிழல்போல தன்னை தொடரும் காதலின் நினைவை ஏந்திகொண்டு கனவு குதிரை ஒன்றுடன் காலம் அழிந்த ஓர் வெளியில் பயணிக்கிறாள் நந்தினி.

இப்படி அறிந்திராத பெண்களின் சித்திரங்கள் ஒவ்வொரு கதையிலும் மாறிகொண்டே இருக்கிறது. “கலை என்பது பல டெம்ப்ளேட்களால் ஆனது” என்ற வெகுஜன மனநிலையை தீர்க்கமான படைப்பாளிகள் மட்டுமே உடைத்துப்போட இயலும் அதையே தீபா தன் கதைகளில் முயல்கிறார்.

தொன்மங்களிலும், வரலாற்றிலும் மறைமுகம் கொண்டு வாழும் காரைக்கால் அம்மையின் தாபத்தின் மீதும், வாஞ்சிநாதன் மனைவி காமாட்சியின் துயரின் மீதும் வெளிச்சம் வீசியுள்ளது இந்த சிறுகதை தொகுப்பில் உள்ள சில கதைகள். சமவெளியில் நின்று புவியின் ஆழத்தில் உள்ள நீரோட்டத்தை கணிப்பதை போல , மனித ஆழ்உள்ளங்களில் ஊடுருவும் சிந்தனைப்பெருக்கை  சொற்கள் கொண்டு கணிக்க முயற்சித்துள்ளது மறைமுகம் சிறுகதை தொகுப்பு.

மயூ வெளியீடு

– இளம்பரிதி
‘வழி’ இணைய இதழின் ஆசிரியர்.

உரையாடலுக்கு

Your email address will not be published.