இசை கவிதைகள்

நல்லதங்கா

கழிவறைக் கதவை
இழுத்துச் சாத்திக் கொள்வது
வசதியானது

தண்ணீர் குழாயை
திறந்து விடுவது
மேலும்
வசதியானது

ஆனால்
வெட்ட வெளியின் மத்தியில்
அமர்ந்திருக்கிறாள் ஒருத்தி

பெண்களின் கண்ணீர் என்பது
ஒரு தனியூத்து
இங்கு நான் காண்பது
அதன் சில துளிகள்

ஒருத்தி அழத்துவங்கியவுடன்
அபலை ஆகிவிடுகிறாள்

அங்கு அப்போதே
முளைத்து விடுகிறது ஒரு கிணறு

“ தொப்” சத்தமே
அப்பாலே போ!

காதலரே… காய்பவரே…

முறுக்கிப் பிழியப்பட்டு
பலகாரக் கடையில் அடுக்கப்பட்டுள்ள
ஜிலேபித் துண்டு போல் ஆகிவிட்டேன் திடீரென்று

யாரும் எடுத்து
விண்டு விழுங்கலாம்

எந்தத் தொண்டையிலும்
நழுவி விழுவேன்
குளு குளுவென

ம்…
சீக்கிரம்…

இந்தச் சலுகை
எத்தனை மணித்துளிகளுக்கென்று
எனக்கே தெரியாது

ஆகட்டும்..

சீக்கிரம்..

சீக்கிரம்…

பணி செய்து கிடத்தல்

துப்புரவுப் பணியாளர்கள்
பணி முடித்து
ஓய்வில் இருக்கிறார்கள்

ஒருவர்
கடைவாய் ஒழுக
வெற்றிலை
மென்று கொண்டிருக்கிறார்

ஒருவர்
போனில்
சத்தமாகச் சிரித்த படியிருக்கிறார்

அணைத்துக் கொள்வதற்குப் பதிலாக
ஒருவரையொருவர்
துரத்தி விளையாடுகிறார்கள்
இளம் பெண்கள்

இதை ஓய்வென்று நம்பவில்லை நான்

இப்போது
உலகின் ஏதோ ஒரு மூலை
துப்புரவாகிக் கொண்டிருக்கிறது

எங்கென்றுதான்
எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி

உரையாடலுக்கு

Your email address will not be published.