ஆதி ரோஜா : ஷங்கர்ராமசுப்பிரமணியன்

கண்களில்
ரத்தமேறி
குணத்துக்கு
எட்டாத தொலைவில்
எரியும் ரணம்
உறங்காமல்
விழித்திருப்பது ஏன்?

000

நான்குமுனைச் சாலையின்
நெரிசலில்
பிதுங்கும் வாகனங்களின்
சக்கரங்கள் ஏறாமல்
ஓரப்பாதசாரிகளால்
நெரிக்கப்படாமல்
இரும்பு வடிகால் துளையின் மேல்
துளிக்காயமின்றி
கிழிசலோ வாடலோ இன்றி
தூசுகூடப் படாமல்
துடித்துக் கிடக்கிறது
ரத்தச் சிவப்பில்
முன்போ பின்போ
இல்லாத
ஆதிரோஜா.

000

இங்கே
சமீபமாக
கொலையோ
சித்திரவதையோ
புணர்ச்சியோ
எதுவும் நடக்கவில்லை
நேற்று மாற்றிய
வெள்ளை படுக்கையில்
குங்குமச் சிவப்பு
மிளகாய் பழத்தின் பளபளப்புடன்
விபரீதப் பூவாய்
பூத்திருக்கிறது
ஒரு துளி.

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. அருமை, இலக்கியத்தில் தனிவழி நடப்பவர் நீங்கள், சிறப்பு,,

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss