
1.
உனது லட்சணம்
இந்த முறை
“போகிறேன்..” என்பதை
அவ்வளவு திடமான குரலில் சொன்னாள்
போய்விடுவாள்தான் போல?
எழுந்தவள்
எட்டு வைத்து
நடக்கிறாள்
பின்னோக்கி…
பின்னோக்கி…
உச்சிவெயிலில்
மொட்டைப் பாறையில்
நன்றாகச்
சம்மணமிட்டு அமர்ந்துகொண்டு
ஆயுளுக்கும் அசையாத கதியில்
அங்கே என்னடி செய்து கொண்டிருக்கிறாய்?
2.
காலிப்பொன்
கனத்த செல்வமென
கொஞ்ச காலம்
உன்னை என் கைகளில்
ஏந்தியிருந்தேன்.
இந்தக் கைகளில்..
இதே கைகளில்..
காலியாகிக் கிடக்கிற
இதே கைகளில்
இப்பவும்
இவைதான்
வெறுங்கைகள் ஆகுமோ ?
கனத்த செல்வம்
சுடர்ந்த கைகள்
3.
இளம் இசை மாணவனின் புத்துலகு
நான்குமுனைச் சந்திப்பின் மூலையில்
இன்னும் எத்தனை ஆண்டுகள்
இப்படி
‘ரி’ யிலேயே
நின்று கொண்டிருப்பார்
அறிஞர் அண்ணா
விளையாட்டுச் சிறுவர்கள்
தூண்களுக்குப் பின்னே
மறைந்து கொண்டு
சுட்டுக் கொண்டிருக்கிறார்கள்
‘பதநி ‘
டுமீல் , டுமீல் என்று வெடிக்கின்றன.
அந்தப் படகு
‘ஸரிகம’ வில் ஏறி
‘ஸ்நிதப’ வில் இறங்குகிறது
ஒருவன்
இன்னொருவனின் முகத்துக்கு நேரே
‘க’ வை நீட்டி
வசை மொழிகிறான்
‘ க’ வை அவ்வளவு
நெருக்கத்தில் கண்டவனின் கண்கள்
இரத்தமாகின்றன.
சப்தம் முடக்கப்பட்ட
கலவிப் படத்தில்
கவ்வி இழுத்து
மெல்ல
விடப்படும் கீழுதடு
‘ரி ‘ என்று ரீங்கரித்துவிடுகிறது
இரண்டு
‘ஸ’ க்கள்
இறுக அணைத்து கொண்டு
வெற்றியை
கூச்சலிட்டுக் கொண்டாடுவதைப் பார்க்கிறேன்
இசைப்பலகை
நெஞ்சிலேறிய பிறகு
உலகம் தாளமாகிறது
என்னைக் கொல்வதற்கு
கத்தியை உருவியபடி
வெறி கொண்டு ஓடிவரும்
கந்துவட்டிக்காரரே…!
பார்த்து ….பார்த்து
’ப ’ வுக்கும், ’ த ’ வுக்கும் இடையே
’த’ வுக்கும் , ‘ நி’ க்கும் இடையே
அய்யய்யோ…
ஒரே அபஸ்வரங்கள்
நாராசம்..!
நாராசம்…!

இசை
கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.
நன்றி : தமிழ் விக்கி
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















