வலி : க.கலாமோகன் 

“நான் ஒருபோதுமே எனது நாட்டுக்குத்  திரும்பிச் சென்றதில்லை. அங்கு 23 வருடங்கள் வாழ்ந்திருப்பேன். இங்கு அதிக காலங்கள். இந்த நாட்டின் மொழியைத் தவறுகளுடன் பேசினாலும் அதுவும் எனது தாய் மொழிபோல. எனது கால்கள் பனியில் பல தடவைகள் 
நுழைந்துள்ளன.”

 “போர் இல்லாத நாடுகளை சிவனும், இயேசுவும், அல்லாவும் ஏன் படைக்கவில்லை? அனைத்துத் தினங்களும் உதிரத்தில் தோய்வது ஏன்? இப்போது நான் ஓர் பத்திரிகையையும் வாங்குவதில்லை. எனது வீட்டிலே உள்ள கவிதைப் புத்தகங்களையும் படிப்பதில்லை. பல புத்தகங்களில்  நான் காண்பது போரினது குரூரங்களையே. ஆம், இவைகளை எழுதுவது அவசியம்தான். ஆனால் போர்கள் அழிகின்றனவா?”

 “அம்மாவின் நினைவுகள் இப்போதும் உள்ளன. அவள் பல ஆண்டுகள் வாழவில்லை, நானும் வாழ்வது போல வாழாதுள்ளேன் என்பதை அறிந்து பல பச்சை இலைகள் அழுதன என்பது   எனக்குத்தான் தெரியும். பல வேளைகளில் எனக்கு அவளது நினைவுகள் வருவதில்லை. சில கனவுகளில் நானும் அவளும் நிர்வாணமாகக் கிடந்தோம். திடுக்கிட்டு விழித்தபோது அவைகளைக் கனவுகள் எனவே நினைத்தேன். நான் இந்தக் கனவுகளை யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் சில வேளைகளில் இதனைக் கேட்கும் சிலரால் பலியாகி இருப்பேன். நான் நாத்திகன். எனது அம்மாவே என் தெய்வம்.”

“எங்களுக்கு இலங்கையில் ஓர் வீடு இருந்தது. இது சிறிது, எமக்கு மாளிகைதான். எனக்கு மாடுகளில் அதிக விருப்பம். இவைகளது சாணிகளில் இருந்த  விருப்பம் பெரிதே. காரணம்: சாணிகள் எமக்குக் கிடைக்கும் சில்லறைகளே. நான் அவைகளை நிலத்தில் பெற்று வீட்டின் கோடியில் (பின் புறம்) சேமிப்பேன். பின் ஒருவர் வந்து அவைகளை வாங்கிச் சிறிது பணம் தந்து எமக்குள் உள நலத்தைத் தருவார். இந்தச் சிறிது பணம் எமது வாழ்வுக்கு உதவியது. புதிய சாணிகளைச் சில வேளைகளில் பினைந்தும் விளையாடினேன். இப்போது நான் வாழ்ந்த வீடும் இல்லை. எரிந்ததுபோய் விட்டது. ஆம், போரால்தான். அங்கு இப்போது மாடுகள் உள்ளனவா என்பதுவும் எனக்குத் தெரியாது. சரி, இந்தக் கொடிய போரால் பலியானது எனது வீடும், மாடுகளும் அல்ல, அதிக மனிதர்களும்  என்பேன்.” 

“நான் இளம் வயதில் ஆங்கிலப் படங்களைப் பார்ப்பேன். இந்த மொழி தெரியாது, சில சொல்களே தெரியும். ரீகல் திரையரங்கில் நான் உருவங்களைத்தான் பார்த்தேன். அவை கறுப்பு உருவங்கள், ஆனால் வெள்ளை நடிகர்கள். இந்தப் பழைய படங்களில் வெள்ளையர்கள் கறுவர்களாக வந்தமையைக்  கண்டு ரசித்தேன். பின்பு வெள்ளையர் ஆதிக்கம் கறுப்பு இனங்களை அடிமையாக ஆக்கியதை அறிந்து எனது இதயம் வெடித்தது. உடலது வாழ்வு குறுகியது என்பது இந்த வெடி குண்டுகளுக்குத் தெரியாதா?”

“இந்த நிலவில், தொலைவில் தெரியும் நிலவில்… எமது நிலத்தில் அழிந்த வீடுகள் அழியாமல் உள்ளதைக் காண்கின்றேன். தொலைவில் உள்ள  நிலாவில் வாழும் வீடுகளிற்கு நான் செல்லமுடியாதுதான். சிலவேளைகளிலே  கனவுகளில் அவைகளிற்குள் செல்லலாம். நிலத்தில் வீடுகள் எரிந்தபோது எனக்கருகில் கடல் இல்லை, கிணறு இல்லை. அழுதேன், அழுதேன்…எனது கண்ணீர்கள் நீர் மழைகளாக மாறும் துடிப்பில். எரிந்து கொண்டிருந்த வீடுகளில் எனது விழி நீர்களும்  எரிந்தன. அப்போது நான் நனைக்கப்பட்டேன். ஆம்…நிலவின் கண்ணீரால்.”

 
“போர் வாழ்வை அங்கு நான் கடந்து வந்தாலும், நான் ஓர் சமாதானத் தரையிலேயா இருக்கின்றேன்? இல்லை. அங்கு எனக்கு வீடு இருந்தது. அது அழிந்தது என்பது போரினால்தான். இங்கு எனக்கு வீடு இல்லை. ஓர் கட்டிடத்தில் ஒரே அறை. வாடகை கட்டாமல் இருப்பின் இந்த வீதியே எனக்கு வீடு. எனது வாசிப்புகளில், அனைத்துக் கண்டங்களிலும் வசதியற்றோர் அடிமைகளாகவே வாழ்கின்றனர்  என அறிந்துள்ளேன். நான் இங்கு அகதியாக வந்தேன், இப்போது வாழ்வதோ அடிமையாக. எமது உலகத்தைக் காட்டிலும் வானில் அகதிகள் இல்லையா, வாடகை இல்லையா, செல்வர்கள் இல்லையா, வங்கிகள் இல்லையா  என்ற கேள்விகளுடன்தான் நான் வானைப் பார்க்கின்றேன்…”
 
இந்தக் கணத்தில் எங்களின் முன் ஓர் ஆணும், பெண்ணும். 
 
பெண் பயந்தபடி. ஆண் ஆத்திரத்தில்.
 
அவன் அவளை அடித்தான், அடித்தான், அடித்தான். அவள் கதறினாள்.
 
அவர் மிகவும் பெரிய கோபத்துடன் எழுந்தார். ஆணின்  ஓர் கை அவரது  கையில் சிக்கியது. அவர் அவனை முரட்டுத்தனமாக அடித்தார்.
 
“அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள்!” எனப் பெண் அழுதாள். 
 
ஆண் விழுந்தான்.
 
“அவளை மீண்டும் அடிப்பியா?” என்று கத்தினார் அவர்.
 
“ஒருபோதும் அடிக்கமாட்டேன்.”

 “நீ சொல்வது உண்மையா?” 
 
“உண்மைதான், நீங்கள் என்னை மீண்டும் அடிக்கவேண்டாம்.” 
 
“சரி போ!”
 
அவன் எழுந்தான். அவள் அவன் பின் சென்றாள். அவர் வானத்தை மீண்டும் பார்த்து முத்தமிட்டார். 
 
000

க. கலாமோகன்

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வரும் தமிழ் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்புகளில் தொடர்ந்து இயங்குகி வருகிறார். சிதறுண்ட தன்னிலைக் கூறில், எங்கேயும் தன்னைச் சரியாக பொருத்திக்கொள்ளாத இயல்பில் தத்தளிக்கும் மனங்களை கதைகளாக்கி வருகிறார்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop