சோ.விஜயகுமார் கவிதைகள்

பிரபஞ்சத்திற்கு திரும்பும் மூன்றாவது நொடி

இந்த வாழ்வுக்குள் வந்ததுபோலவே
அந்த மலைகளுக்கும் நாம்
முன்னும் பின்னுமாய் பயணித்தோம்

நீ எனைக் கண்டடைந்தது
மூன்றாவது கொண்டை ஊசி வளைவில்
நான் உனைப் பிரிந்தது
பதினோராவது கொண்டை ஊசி வளைவில்
*
வானம் உன் கண்களின் வழியாக
தேயிலைத் தோட்டத்தில் இறங்கிக்கொண்டிருந்தபோது
கத்திரியில் வெட்டப்பட்ட இலைகளுக்கு நடுவே
பனி படர்ந்த தேயிலைப்பூ விழுந்தது

அதை யாரும் சூடவுமில்லை
அது வாடவுமில்லை
*
தனித்தும் தணிந்தும்
மலை முகட்டை அடையும்போது
பள்ளத்தாக்கிலிருந்து மேலெழும்பிய மேகங்களைக்
கூர்ந்து நோக்கும் கண்களில் ஒரு துளி விழுகிறது

உப்பிட்ட பாதைகளில்
பெருகியோடும் சுனையை அதுதான் தீர்மானிக்கிறது
*
தூரத்துப் பச்சையில்
துலங்கலாய் தெரியுமொரு மரத்தில்
உணர்தலின்பொருட்டு என் கையை
அதன் திசைநோக்கி நீட்டினேன்
என் விரல்களின் கூச்சலை
உன் கண்கள் கேட்டன
*
நாம் பார்த்தபோது
வெள்ளை வால் அசைய பறக்கும்
அந்த அரிய பறவை அசையாமல் நின்றது
உனக்காக ஒரு நொடி
எனக்காக ஒரு நொடி
*
நாம் பார்த்தோம்
தேயிலைப் பூவை காலில் பற்றியபடி
மேலும் கீழுமாய்
இப்பிரபஞ்சம் இருநொடி அசைந்ததை

௦௦௦

சோ.விஜயகுமார்

சோ.விஜய குமார், தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். உயிர்மை இதழின் இணையாசிரியராகப் பணியாற்றினார். "ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)", "சிற்றெறும்பின் நிழல் (2024)","அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)", ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழ் விக்கியில்


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

உரையாடலுக்கு

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop

Don't Miss