
ஆன்மாவைத் தின்பவன்
எனது அன்பின் துளிகள்
உறைந்துவிட்டன
அதன்மேல் வீழும்
உனது அன்பின் துளிகளும்
உறைந்துவிட்டன
என் உடல் மூடப்பட்டிருக்கிறது
கண்ணீரின் உப்பால்
*
உன் சொற்களின் ஒரு வார்த்தைக்கும் மறுவார்த்தைக்குமிடையே
என் உயிர் நரம்புகள்
முறுக்கேற்றி கட்டப்பட்டிருக்கின்றன
அதில் கூர்நகமென அசைந்துகொண்டிருக்கிறது
இந்தக் காலம்
*
உன் மடியென நினைத்து
நான் உறங்கினேன்
உன் மடியின் அருகிலேயே
ஒரு ஆன்மாவைத் தின்பவனாக
நான் மாறுவேன் என கனவிலும் நினைத்ததில்லை
இமைகளை பிரிக்க முடியாமல்
இப்போது அவைமீது ஒட்டிக்கொண்டிருப்பது
எந்த நியாபகத்தின் பசை
*
நீ வெளியேறுவது
என் மொத்த உலகத்திலிருந்து
என் பிரியத்தின் விரல்கள் ஒவ்வொன்றையும் நானேதான் விலக்கினேன்
நீ மற்றொரு கரமென பற்றிக்கொண்டிருந்தது
உன் கரத்தைத்தான்
எனது கரத்தை உதறியது
எதிர்பார்த்த ஒன்றுதான்
பாரமான நிழலொன்று
வெளியேற எத்தனித்தபோது
தடுக்காதது மெத்தனத்தால் அல்ல
உயிரோடு இருப்பதற்கும் அழிவதற்கும் அவ்வளவுதான் வித்தியாசம் என்பதால்
*
ஒவ்வொரு இரவும் நீ தனிமையில்
செத்துப் பிழைத்ததும்
கூட்டத்தின் நடுவே நான் சாகாமல் கிடப்பதும்
கண்ணாடியில் நாம் காணும்
இடம் வலம் மாற்றிய பிம்பங்கள்
ஒரு நாள் என் வார்த்தைகள்
தீர்ந்து போகும்
உன் மௌனம் எனக்குள்
ஆயிரமாயிரம் அர்த்தங்களை
உருவாக்கி அழித்தபிறகும்
அப்படியே எஞ்சி நிற்கும்
எப்போதும்போல
ஒரு கற்சிலையின்முன் கண்ணாடி வளையல்களோடுதான் நான் இப்போதும் நின்றுகொண்டிருக்கிறேன்
000

சோ.விஜயகுமார்
சோ.விஜய குமார், தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். உயிர்மை இதழின் இணையாசிரியராகப் பணியாற்றினார். "ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)", "சிற்றெறும்பின் நிழல் (2024)","அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)", ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.